Wednesday, August 6, 2014

ஊர் காசுல பிரசாதப்பை

சென்னை : சட்டசபையில், மானிய கோரிக்கை விவாதத்தின் போது, உணவு மற்றும் பரிசுப் பொருட்கள் வாங்க, அமைச்சர்கள் லட்சக்கணக்கான ரூபாயை செலவழிக்கின்றனர். நேற்று, இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கையையொட்டி, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, பிரசாதப்பை மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்க, துறை ஊழியர்கள் பைகளுடன், தலைமைச் செயலகத்தை வலம் வந்தனர். சட்டசபையில், மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. தினம், ஒன்று முதல் மூன்று துறை வரை, மானிய கோரிக்கை நடைபெறுகிறது. தினமும், எந்தத் துறை மானிய கோரிக்கை மீது, விவாதம் நடைபெறுகிறதோ, அந்தத் துறை சார்பில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் - ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், துறை அலுவலர்கள், அமைச்சரவை அலுவலக ஊழியர்கள் என, அனைவருக்கும், காலை மற்றும் மதிய உணவு வழங்கப்படுகிறது. அத்துடன் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறது.
பால்வளத் துறை மானிய கோரிக்கையின்போது, ஆவின் பொருட்கள் வழங்கப்பட்டன. வேளாண் துறை மானிய கோரிக்கையின் போது, இளநீர், நெல்லிக்காய் ஜூஸ், சூட்கேஸ் போன்றவை வழங்கப்பட்டன. நேற்று, இந்து சமய அறநிலையத் துறை மற்றும் சுற்று லாத் துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது.

பிரசாதம் : சுற்றுலாத்துறை சார்பில், உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்து சமய அறநிலையத் துறை சார்பில், அனைவருக்கும் பிரசாத பை வழங்கப்பட்டது. பழநி முருகன் படம் அச்சிடப்பட்ட பையில், அபிராமி அந்தாதி புத்தகம், கந்த சஷ்டி புத்தகம், விநாயகர், அரங்கநாதர் படங்கள், திருக்கோவில் கையேடு, பழநி கோவில் பஞ்சாமிர்தம், இரண்டு லட்டு, முறுக்கு பாக்கெட், அதிரச பாக்கெட், மீனாட்சியம்மன் கோவில் குங்குமம், விபூதி, முந்திரி, ஹாட்பேக் ஆகியவை இருந்தன. இவற்றை, அனைத்து துறை அலுவலர்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் வழங்குவதற்காக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட அறநிலையத் துறை செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள் மற்றும் ஊழியர்கள், தலைமைச்
செயலகம் வந்தனர். அவர்கள் பைகளை எடுத்துச் சென்று, ஒவ்வொரு அலுவலகமாக வழங்கினர். ஓய்வுபெற்ற அதிகாரிகளின் வீடுகளுக்கும், கொண்டு சென்றனர்.

சொந்த பணம் : ஒவ்வொரு துறை மானிய கோரிக்கையின்போதும், அந்த துறை அமைச்சர்கள், உணவு மற்றும் பரிசுப் பொருளுக்காக, அரசு நிதி எதுவும் ஒதுக்குவதில்லை. அமைச்சர்கள், சொந்த பணத்தை செலவழிக்கின்றனர். சில துறைகளில், அதிகாரி கள் செலவழிக்கின்றனர். துறை மானிய கோரிக்கையின்போது, தினமும் காலை மற்றும் மதியம், 3,000 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. மதியம், 2,000 பேருக்கு, அசைவ உணவும், 1,000 பேருக்கு சைவ உணவும் வாங்கப்படுகிறது. இதற்கே லட்சக்கணக்கில் பணம் செலவாகிறது. இது தவிர பரிசுப் பொருட்கள் வாங்கப்படுகின்றன.
இது பெரும்பாலும், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இதற்கு கணிசமான தொகை செலவழிக்கப்படுகிறது.
இதற்கு நிதி எவ்வாறு ஒதுக்கப்படுகிறது என கேட்க வேண்டிய, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பரிசு பொருட்களை, ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இதற்கு கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,க்களும் விதிவிலக்கல்ல.

இதுகுறித்து, தலைமைச் செயலக ஊழியர்கள் கூறியதாவது: இது வழக்கமான நடவடிக்கை. எந்த ஆட்சி வந்தாலும், இது தொடர்கிறது. இதற்கு நிதி எப்படி வருகிறது என, யாரும் கேள்வி கேட்பதில்லை. பரிசுப்பொருள் எப்படி உள்ளது என்று தான் பார்ப்பர். தற்போது பணியிலிருப்போருக்கு கொடுப்பதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஓய்வுபெற்ற அதிகாரிகள், பரிசுப் பொருள் வராவிட்டால், கோபித்துக் கொள்கின்றனர். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

ஆலோசனை கூட்டம் நடத்தி அசத்தல் : இந்து சமய அறநிலையத் துறை சார்பில், மிகப்பெரிய திட்டத்தை செயல்படுத்த, ஆலோசனைக் கூட்டம் நடத்துவதுபோல், யாருக்கெல்லாம் பிரசாதப் பை வழங்க வேண்டும் என்பதை முடிவு செய்ய, ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
கடந்த, 2ம் தேதி, கமிஷனர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்ட கோவில் செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று முன்தினம், சென்னை, மயிலாப்பூரில் நடந்த கூட்டத்தில், ஒவ்வொருவரும் யாருக்கு, பிரசாதப் பை மற்றும் பரிசுப்பொருள் வழங்க வேண்டும் என, பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.

செய்தி: http://www.dinamalar.com/news_detail.asp?id=1039026

Tuesday, August 5, 2014

அறநிலையத்துறையிடம் இருந்த 47,000 ஏக்கர் மாயமானதா?

தமிழகத்தில் கடந்த, 30 ஆண்டுகளில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான, 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மாயமாகியுள்ளதாக அரசின் புள்ளிவிவரங்கள் காட்டுவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில், 36,488 கோவில்கள், 56 திருமடங்கள், 58 பிரமாண்ட கோவில்கள், 17 சமண கோவில்கள் உள்ளன. அவற்றுக்கு சொந்தமாக, 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் அறநிலையத் துறையின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. கோவில்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து தானமாக வழங்கப்பட்ட சொத்துகளை முறையாக பராமரிக்கவும், இதன் நிர்வாகத்தில் தனியாரால் தவறுகள் எதுவும் நிகழாமல் பார்த்துக் கொள்வதற்காக என்று கூறி, கோவில் நிர்வாகத்தை அறநிலையத்துறை கையில் எடுத்தது. ஆனால், அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வந்தபிறகு தான் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக, பக்தர்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது. முன்னோரும், அரசர்களும் கோவில்களுக்காக விட்டுச் சென்ற நிலங்கள் தொடர்ந்து தர்ம காரியங்களுக்கு பயன்பட வேண்டும் என்பதே எல்லாரது விருப்பம். ஆனால், இந்த நிலங்களை பராமரிப்பது, பாதுகாப்பதில் அறநிலையத்துறை அதிகாரிகளின் செயல்பாடு, பொதுமக்களுக்கு திருப்தி அளிப்பதாக இல்லை.

பராமரிப்பு இல்லை : கோவில் சொத்துகளை முறையாக பராமரிக்காததுடன், அதற்கான ஆவணங்களையும், அறநிலையத் துறையினர் முறையாக பராமரிக்கவில்லை என்று புகார் கூறப்படுகிறது.

உதாரணமாக, நெல்லை அருகே, வரகுணபாண்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 4,500 ஏக்கர் நிலம் கோவிலுக்கும், இந்து சமய மக்களுக்கும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
திருவாரூர் மாவட்டம், வடுவூர் கோதண்ட ராமர் கோவிலுக்கு சொந்தமான, 5,400 ஏக்கர் நிலம் இப்போது கோவில் வசம் இல்லை. சேலம் சுகவனேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 112 ஏக்கர் நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
வேதாரண்யம் சிவன் கோவிலுக்கு சொந்தமான, 13 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் என்ன நிலையில் உள்ளன என்பது புதிராக உள்ளது.

47 ஆயிரம் ஏக்கர் எங்கே? : இத்தனைக்கும் மேலாக அறநிலையத் துறையால் பராமரிக்கப்பட்டு வரும், கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் குறித்த புள்ளிவிவரங்களை, ஆய்வு செய்ததில், கடந்த, 30 ஆண்டுகளில், ஏராளமான நிலங்கள் மாயமாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கடந்த, 1986ல், தமிழக அரசு வெளியிட்ட அறநிலையத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில், 'இத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமாக, 5.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன' என்று குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் இது, 4.78 லட்சம் ஏக்கராக குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்படி, கடந்த, 30 ஆண்டுகளில், அறநிலையத்துறை நிர்வாகத்தில, 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் என்ன ஆனது என்ற கேள்வி, பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

செய்தி: http://www.dinamalar.com/news_detail.asp?id=1038126&

Monday, August 4, 2014

குப்பையாக கிடக்கும் கோவில் சொத்து ஆவணங்கள்!


கோவில் சொத்து ஆவணங்களை பாதுகாத்து பராமரிப்பதில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், அலட்சியமாக நடந்து கொள்வதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில், 36,488 கோவில்கள், 56 திருமடங்கள், 58 பிரமாண்ட கோவில்கள், 17 சமண கோவில்கள் உள்ளன.ஒப்புதலுடன்...:அவற்றுக்கு சொந்தமாக, 4.78 லட்சம் ஏக்கர் நிலங்களும், 22,600 கட்டடங்களும், 33,665 கடைகளும் அறநிலையத் துறையின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன.அறநிலையத் துறை சட்டத்தின், 29வது பிரிவின்படி, அந்த கோவில் குறித்த எல்லா விவரங்களையும், கோவில் சொத்துகளின் அனைத்து விவரங்களையும் தொகுத்து, பதிவு செய்யப்படும் பதிவேடுகள் மிக மிக முக்கியமானவை. அவை ஒரு வகையில், வரலாற்று ஆவணங்களும் கூட.கோவிலில் உள்ள பாத்திரங்கள், நகைகள், வாகனங்கள், சன்னிதிகள், கல்வெட்டுகள், சிலைகள், மண்டபங்கள், மரங்கள், பாரம்பரியம், திருவிழாக்கள், பரம்பரை அறங்காவலர்கள், நிலங்கள், என, அனைத்து விவரங்களும் அந்த பதிவேடுகளில் இருக்க வேண்டும்.கமிஷனர் ஒப்புதலுடன், சம்பந்தப்பட்ட கோவில் அதிகாரிகள் அதை பராமரிக்க வேண்டும்.

அந்த சட்டத்தின் 30வது பிரிவின்படி, ஆண்டுதோறும் கோவில் சொத்துகளில் புதிதாக வந்தவற்றையும், நீக்கப்பட்டதையும் தனித்தனி பதிவேடுகளாக பராமரிக்க வேண்டும்.இதற்கு அடுத்தபடியாக, 31வது பிரிவின்படி, 10 ஆண்டு களுக்கு ஒருமுறை பெரிய கோவில்களுக்கு நேரடியாகவும், மற்ற கோவில்களுக்கு இணை கமிஷனர் வாயிலாகவும், பதிவேடு களுக்கு கமிஷனரின் ஒப்புதலை பெற வேண்டியது கட்டாயம்.ஆனால், இம்மூன்று சட்ட விதிகளின் அடிப்படையில் செய்ய வேண்டிய கடமைகளை அதிகாரிகள் சரிவர செய்யாததுடன், பெரும்பாலான கோவில்களில் சொத்து ஆவணங்களை கூட முறையாக பாதுகாக்க தவறுவதுடன், பல இடங்களில் ஆவணங்களை அழிக்கும் மோசடி சம்பவங்களும் நடக்கிறது என, பக்தர்கள் புகார் கூறுகின்றனர்.கிரிமினல் குற்றம்:விலை உயர்ந்த பொருட்களையும், சொத்துகளையும் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்போர் அதை சரிவர செய்யாமல் இருப்பதும், அதற்கான ஆவணங்களை அழிப்பதும், சிறையில் தள்ளும் அளவுக்கு, கிரிமினல் குற்றமாக கருதப்படும் நிலையில், அறநிலையத் துறை அதிகாரிகள், சட்ட விதிகளை அலட்சியப்படுத்துவதை அரசு தடுக்காமல் இருப்பது ஏன் என, பல்வேறு ஆன்மிக அமைப்புகள் கேள்விகள் எழுப்பியுள்ளன.திருவாரூரில் அவலம்இதுகுறித்து ஆலய வழிபடுவோர் சங்க செயல் தலைவர் டி.ஆர். ரமேஷ் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில், இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தின், 29, 30, 31 ஆகிய விதிகளை அத்துறை அதிகாரிகளே மீறுவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.இரண்டாயிரம் ஏக்கர் நிலம்உள்ள திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில், ஆவணங் கள் குப்பை போல் கொட்டி வைக்கப்பட்டுள்ளன.பல்வேறு கோவில்களிலும் இதே நிலைதான் தொடர்கிறது. இத்தகைய மோசமான நிர்வாகத்தில் கோவில்கள் தொடர வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து அறநிலையத் துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், இத்துறையில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையும், கோவில்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்படும் அதிகாரிகள் இதற்கான பணிகளை மேற்கொள்ளாததுமே இதற்கு முக்கிய காரணம் என்றார்.

http://temple.dinamalar.com/news_detail.php?id=33937

Sunday, August 3, 2014

கோவில் நிலத்தில் கட்டுமானம்: தடுத்து நிறுத்திய பகுதிவாசிகள்

கோவில் நிலத்தில் கட்டுமானம்: தடுத்து நிறுத்திய பகுதிவாசிகள்


http://epaper.dinamalar.com/PUBLICATIONS/DM/DINAMALAR/2014/08/03/ArticleHtmls/03082014002006.shtml?Mode=1

Saturday, August 2, 2014

சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோவிலில் கற்சிலைகள் திருட்டு; பாராமுகமாய் இருக்கும் அறநிலைய துறை


பென்னலுார் : பென்னலுாரில், சோழர் காலத்தில் கட்டப்பட்ட அகத்தீஸ்வரர் கோவிலில் பாதுகாப்பு இல்லாததால், பழமையான கற்சிலைகள் காணாமல் போய்விட்டன.

ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்கு உட்பட்டது, பென்னலுார். ராஜராஜ சோழனால், அந்த கிராமத்தில் அகத்தீஸ்வரர் கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. கோவிலின் நுழைவாயில், தென்திசை நோக்கி உள்ளது. கோவில் வளாகத்தில், கருவறை மண்டபம், நந்தி, அம்மன் சன்னிதி, நவக்கிரக சன்னிதிகள் என, தனித்தனியாக இருந்துள்ளது. இந்த நிலையில், கோவிலுக்கு அருகில் வசித்த பகுதிவாசிகள், பல்வேறு காரணங்களுக்காக, பென்னலுாரை விட்டு, வெளியேறி, சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குடியேறினர். இதனால், கோவில் பராமரிப்பும், பாதுகாப்பும் இல்லாமல் போனது. கோவில் சுற்றுச்சுவர் கருங்கற்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

அகத்தீஸ்வரர் கோவில் சுவர் மாடத்தில், தெற்கு மற்றும் வடக்கு சுவர்களில் இருந்த பழமையான சிலைகளை மர்ம நபர்கள், கடப்பாறையால் பெயர்த்தெடுத்து கடத்தி சென்றுள்ளனர். அதேபோல, பெரிய நந்தி, சுற்றுச்சுவர் கருங்கற்களையும், விட்டு வைக்கவில்லை. தற்போது, நுழைவுவாயில் மண்டபம், நந்தி, கருவறை மண்டபம், அம்மன் சன்னிதி, சுற்றுச்சுவர் ஆகியவை சிதிலமடைந்து, கருங்கற்கள் பெயர்ந்துள்ளன. கோவில் வளாகத்தில், முட்செடிகள் வளர்ந்து உள்ளன. கருவறை மண்டபத்தின் மீது, வளர்ந்துள்ள மரங்களால், விரைவில் அது இடிந்து விழும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.பிரதோஷ தினத்தன்று மட்டும், கிராமத்தை சேர்ந்தவர்கள், சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

பழமையான அந்த கோவிலை புனரமைக்கவும், தினமும் வழிபாடு நடத்தவும், திருடு போன சிலைகளை கண்டுபிடிக்கவும், இந்து சமய அறநிலைய துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி: http://www.dinamalar.com/news_detail.asp?id=1038126&