Friday, August 10, 2018

TVS குழும நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசன் முன் ஜாமீன் மனு

 சிலை திருட்டு வழக்கில் கைது செய்யப்படக்கூடும் என்ற அச்சத்தில் TVS குழும நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசன் முன் ஜாமீன் மனு

Aug 10, 2018 1:39 AM

மயிலாப்பூர் கோவிலில் 1000 ஆண்டு பழமையான மயில் சிலை களவாடப்பட்ட வழக்கில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கோவிலில் அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பு வகித்த டிவிஎஸ் குழுமங்களின் தலைவர் வேணு சீனிவாசன் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னை மயிலாப்பூரில் பிரசித்தி பெற்ற கபாலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வரலாற்று சிறப்புமிக்க பழமையான மயில் சிலை ஒன்று களவாடப்பட்டதாக புகார் எழுந்தது.

இங்கு பார்வதி மயில் ரூபத்தில் வந்து சிவனை மலர் தூவி பூஜித்தார் என்பதை நினைவூட்டும் வகையில், வாயில் குவளை மலரை கவ்வியபடி சிவலிங்கத்துக்கு மயில் ஒன்று பூஜை செய்வது போல, 1000 ஆண்டுகள் பழமையான கல்லாலான மயில் சிலை ஒன்று மூலவர் அருகே அமைக்கப்பட்டிருந்தது.

2004 ஆம் ஆண்டு நடந்த கும்பாபிசேகத்திற்கு பின்னர், அந்த பழமையான மயில் சிலையை அகற்றிவிட்டு புதிதாக ஒரு மயில் சிலை உள்ளே வைக்கப்பட்டிருந்தது. புதிதாக அமைக்கப்பட்ட மயில் சிலையின் வாயில் மலருக்கு பதில் பாம்பை கவ்விக் கொண்டிருப்பது போல இருந்ததால் மயில் சிலை களவாடப்பட்டதை பக்தர்கள் அடையாளம் கண்டு கொண்டனர். தொன்மையான மயில் சிலை மாயமானது தொடர்பாக இந்து சமய அறநிலையதுறை புகார் ஏதும் அளிக்காமல் மறைத்து வந்து நிலையில், பக்தர் ஒருவர் அளித்த புகாரின் பேரின் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் சம்பந்தப்பட்டவர்கள் மீது அண்மையில் வழக்குப் பதிவு செய்தனர்.

இதற்கிடையே ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மூலவர் சிலை திருடி கடத்தப்பட்டதாகவும் அங்கு நடந்த கோவில் புனரமைப்பு பணிகளில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாகவும் ,இது குறித்து புகார் அளித்தால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் ரங்கராஜன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஸ்ரீரங்கம் கோவில் சிலை கடத்தல் குறித்து விசாரித்து 6 வார காலத்தில் நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு உத்தரவிட்டது.

ஸ்ரீரங்கம் கோவிலில் சிலைகடத்தல் ஐஜி பொன்மாணிக்க வேல் தனது விசாரணையை இன்று தொடங்க இருக்கும் நிலையில், மயிலாப்பூர் மற்றும் ஸ்ரீரங்கம் கோவில்களின் அறங்காவலர் குழு தலைவராக இருந்த, டிவி சுந்தரம் அய்யங்காரின் பேரனும் , டிவிஎஸ் குழுமங்களின் தலைவருமான, வேணு சீனிவாசன், முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்

அந்த மனுவில் வேணு சீனிவாசன், 10 ஆயிரம் பேரை தொழிலாளர்களாக கொண்ட டிவிஎஸ் குழுமங்களின் தலைவராக உள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழகம், கர்நாடகம், கேரளாவில் 100 க்கும் மேற்பட்ட கோவில்களை அறக்கட்டளை நிதியில் புனரமைத்து கொடுத்துள்ளதாகவும், அந்தவகையில் கடந்த 2004 ஆம் ஆண்டு மயிலாப்பூர் கோவிலின் அறங்காவலர் குழுதலைவராக இருந்து கும்பாபிசேகத்திற்கு 70 லட்சம் ரூபாய் மதிப்பிலும், 2015 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழு தலைவராக இருந்து கும்பாபிசேகத்திற்கு 25 கோடி ரூபாய் மதிப்பிலும் முழுமையாக புனரமைப்பு பணிகளை செய்து கொடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டி உள்ளார்.

மேலும் மயிலாப்பூர் கோவிலில் பல்வேறு முறைகேடுகளை செய்ததாக குற்றஞ்சாட்டி காவல்துறை தன் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், இந்த முறைகேடுகள் குறித்து தனக்கு ஏதுவும் தெரியாது என்றும், தன்னை காவல்துறையினர் கைது செய்யாமல் இருக்க தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் வேணு சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன் முன் ஜாமீன் வேண்டி உயர் நீதிமன்றத்தை நாடி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Source : https://www.polimernews.com/view/23834-TVS-Group-Chairman-Venu-Srinivasan-bail-plea-for-fear-of-being-arrested-in-the-idol-theft-case 
 
 

No comments:

Post a Comment