Wednesday, March 19, 2014

டபுள் ஆக்ட்' தக்கார்கள்,டைரக்ட்' செய்யும் தமிழக அரசு

'அத்திப்பழத்தைப் பிட்டுப் பார்த்தால் அத்தனையும் சொத்தை' என்பதை, நிரூபிக்கும் வகையில், ஒரு ஜனநாயக அரசு, தமிழக இந்துக்களை காலம் காலமாக ஏமாற்றி வருகிறது

இந்து அறநிலைய சட்டத்தின் 47வது பிரிவுப் படி, அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு அறங்காவலர் குழுவை, அரசு அமைக்க வேண்டும். கோவில்களையும், இந்து சமய அறக்கட்டளைகளையும் நிர்வகிப்பதற்கு, சட்டப்படி, அறங்காவலர்களுக்கு மட்டும் தான் அதிகாரம் உள்ளது. மேலும்,கோவில் பணியாளர் நியமனம்கோவில் பணத்தை செலவழிப்பதற்கான ஒப்புதல் வழங்குவதுகோவில் சொத்துகளை விற்பதற்கு (சிவில் சட்டப்படி, நீதிமன்ற
ஒப்புதலுடன் இது நடக்க வேண்டும்) கோவில் சொத்துகளை குத்தகைக்கு விடுவதற்கு
என, அனைத்து முக்கிய முடிவுகளுக்கும், முதலில் அறங்காவலர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.அதேபோல், கோவிலின் பூஜை, உற்சவம், கும்பாபிஷேகம், பராமரிப்பு போன்றவற்றில் அறநிலைய துறை அதிகாரிகளுக்கோ, அரசுக்கோ சுத்தமாக எந்த அதிகாரமும் கிடையாது என, அறநிலைய சட்டம் தெரிவிக்கிறது.

அறங்காவலர்களுக்கு மட்டுமே இவை குறித்து முடிவெடுக்க அதிகாரம் உள்ளது.அறங்காவலர்களின் பணி இவ்வளவு முக்கியமானதாக இருக்க, கடந்த மூன்று ஆண்டுகளாக, தற்போதைய தமிழக அரசு, வேண்டுமென்றே, யாரையும் நியமிக்கவில்லை. கட்சிக்காரர்களையும், பெயர் அளவில், இந்துக்களாக இருப்பவர்களையும், கிரிமினல் பேர்வழிகளையும் அறங்காவலர்களாக நியமனம் செய்யாமல் இருப்பது ஒரு வகையில் நல்லதுதான். ஆனால், தமிழக கோவில்களையும், இந்து சமய அறக்கட்டளைகளையும் கேள்வி கேட்பாரின்றி, அரசின் முழு கட்டுப்பாட்டில் வைப்பது தான், இந்த தாமதத்தின் நோக்கம்.அறங்காவலர்கள் இல்லாமல் கோவில் நிர்வாகங்கள் எப்படி நடக்கின்றன? இதற்கு, 47வது சட்டப் பிரிவில் ஒரு வழிவகை தரப்பட்டு உள்ளது. எப்போதாவது பயன்படுத்த வேண்டிய இந்த பிரிவை, அரசும், அறநிலைய துறையும், மோசடியாக பயன்படுத்துகின்றன.

அந்த சட்ட பிரிவின் படி, 'ஒரு அறங்காவலர் குழு, இரண்டு ஆண்டுகளுக்கு, நிர்வாகத்தில் இருக்கும். இரண்டு ஆண்டுகள் முடிந்தோ அல்லது குழு கலைக்கப்பட்டோ, மீண்டும் அறங்காவலர்களை நியமனம் செய்யும்முன், தக்கார் ஒருவர் தற்காலிகமாக குழுவின் பொறுப்புகளைப் பார்த்துக் கொள்வதற்காக நியமனம் செய்யப்படலாம்.'

இதை பயன்படுத்தி, அரசு, இரண்டு வகையான மோசடிகளில் ஈடுபடுகிறது;
1 இரண்டு ஆண்டுகள் ஆயுள் உள்ள அறங்காவலர் குழுவின் இடத்தில், தற்காலிகமாக நியமிக்கப்பட வேண்டிய நபராகிய தக்காரின் பதவி காலத்தை இரண்டு ஆண்டுகளை தாண்டி நீட்டிப்பது.
2 தக்காராக அறநிலைய துறை அதிகாரிகளையே நியமிப்பதுஒரு கோவிலுக்கு அறங்காவலராக இருப்பவர், அந்த கோவில் எந்த மத உட்பிரிவைச் சேர்ந்ததோ, அந்த சமூகத்தில் இருந்து வர வேண்டும். இரண்டாவது, அந்த கோவில் எந்த ஊரில் இருக்கிறதோ அந்த ஊரை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இவற்றோடு அவர் தெய்வ பக்தியும், நல்லொழுக்கமும், கோவிலுக்குத் தன் நேரத்தை செலவழிக்கக் கூடியவராகவும் இருக்க வேண்டும்.

எந்த கோவிலுக்கும் அரசு ஊழியர்களை, அறங்காவலராக நியமனம் செய்ய அறநிலைய துறை சட்டத்தில், வழிவகை செய்யப்படவில்லை. அப்படி செய்யவும் முடியாது. இதில் சட்ட சிக்கல்களும், ஒழுங்குமுறை முரண்பாடுகளும் உள்ளன. ஆயினும், கடந்த 30 - 40 ஆண்டுகளாக, இந்த மோசடி, 'ஜாம் ஜாம்' என, நடந்து வருகிறது. சில கோவில்களில் செயல் அலுவலரே, அந்த கோவிலின் தக்காராக நியமனம் செய்யப்படும் மாபெரும் மோசடியையும் பார்க்கலாம்.

'ஒரு வங்கிக் கணக்கை இயக்க, இருவர் கையெழுத்து தேவை' என, ஒரு நிறுவனத்தில் கட்டுப்பாடு இருந்தால், ஒருவரே இரண்டு கையெழுத்துகளையும் போட்டால் வங்கி பணம் தராது. அத்தகைய காசோலை செல்லுபடியாகாது. அதுபோன்று தான் இந்த, 'டபுள் ஆக்ட்' தக்கார்களின் உத்தரவுகளும். அவை ஒன்றுமே செல்லுபடியாகாது.

சொத்தையான இந்த தக்கார் நியமனங்களை மறைக்கத்தான்; சில பெரிய மனிதர்களை, தம் சொந்த செலவில், கோவில்களுக்கும், தர்ம காரியங்களுக்கும் செலவு செய்யும் தொழிலதிபர்களை முக்கிய கோவில்களுக்கு, அரசு, தக்கார்களாக நியமனம் செய்கிறது. மேலே, நல்ல பழங்களை வைத்துவிட்டு, கீழே எல்லாவற்றையும் சொத்தையாக வைக்கும் வியாபாரம் தான் இதுவும்.இன்னும் எத்தனை காலம், தமிழக மக்கள் கேள்வி கேட்காமல் இருக்கப் போகின்றனரோ?டி.ஆர்.ரமேஷ்தலைவர், ஆலய வழிபடுவோர் சங்கம்

http://www.dinamalar.com/district_detail.asp?id=936256

No comments:

Post a Comment