Friday, April 18, 2014

'அறநிலைய துறை மூலம் செய்த நியமனங்கள் எதுவும் செல்லாது'

சென்னை: ''அறநிலைய துறை சட்டத்தின் மூலம், கோவில் செயல் அலுவலரை நியமனம் செய்ய, வழிமுறை இல்லை. இதுவரை செய்த நியமனங்கள் அனைத்தும், செல்லு படியாகாது,'' என, ஆலய வழிபடுவோர் சங்க செயலர், டி.ஆர்.ரமேஷ் கூறினார்.

நாகப்பட்டினம் மாவட்டம், வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள, வைத்தியநாத சுவாமி தேவஸ்தானம், தருமபுர ஆதீன கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த கோவிலை, அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது குறித்து, ஆதீனத்திற்கு, அறநிலைய துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு எதிராக, தருமபுர ஆதீனம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடரப் பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, அறநிலைய துறையின் நோட்டீசை ரத்து செய்தார். அவர் தன் தீர்ப்பில், 'அறநிலைய துறை சட்டப் பிரிவு ௪௫ன் படி, கமிஷனர், ஒரு கோவிலில் செயல் அலுவலரை நியமிக்க முடியாது' என, குறிப்பிட்டார். இதுகுறித்து, ஆலய வழிபடுவோர் சங்க செயலர், ரமேஷ் கூறிய தாவது:

இந்து மத கோவில்களை, அறநிலைய துறை, தன் நிர்வாகத்தில் கொண்டு வர முடியாது. 39 ஆயிரம் கோவில்களை, அறநிலைய துறை, தன் நிர்வாகத்தின் கீழ் வைத்து உள்ளது, சட்ட விரோதம். கடந்த, 55 ஆண்டுகளாக, அதிகாரமே இல்லாத, இந்து சமய அறநிலைய துறை சட்டத்தின், 45வது பிரிவை பயன்படுத்தி, ஆயிரக்கணக்கான கோவில்களை மக்களிடம் இருந்து, அரசு பிடுங்கியுள்ளது.சிதம்பரம் நடராஜர் கோவில் தீர்ப்பில், செயல் அலுவலர் நியமிப்பது தொடர்பாக, உச்சநீதிமன்றம், வழிகாட்டியுள்ளது.
* அதன்படி, ஒரு சமய நிறுவனத் தில், பெரும் நிர்வாகக் குறைபாடு இருந்தால் மட்டுமே, குறைபாடுகளை களைய, செயல் அலுவலரை குறுகிய காலத்திற்கு, நியமனம் செய்யலாம்.
* நிர்வாகத்தை சரி செய்யும் நோக்கம் மட்டுமே, அறநிலையத் துறைக்கு இருக்க வேண்டும்.
* சரி செய்த மறு நிமிடம், கோவிலை, மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும்.
* செயல் அலுவலர் நியமன உத்தர வில், நியமன காலம் குறிப்பிடப்படாவிட்டால், அந்த உத்தரவு செல்லாது. அதையே, உயர்நீதிமன்றமும் உறுதிபடுத்தி உள்ளது. மேலும், மிக முக்கியத்துவம் வாய்ந்த தகவலையும், உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இந்து சமய அறநிலைய துறை கமிஷனர், செயல் அலுவலரை, நியமனம் செய்ய, 45வது சட்டப்பிரிவை பயன்படுத்துகிறார். அந்த பிரிவில் இருக்க வேண்டிய நிபந்தனைகள், சட்டத்தில் இல்லை. அதனால், அந்த பிரிவை பயன்படுத்த, கமிஷனருக்கு எந்த அதிகார மும் கிடையாது. அதிகாரமே இல்லாத, அந்த பிரிவை பயன்படுத்தி, ஆயிரக்கணக்கான கோவில்களில், அறநிலைய துறை, செயல் அலுவலர்களை நியமித்து வந்துள்ளது. அதே தீர்ப்பு தான், வைத்தீஸ்வரன் கோவில் விவகாரத்திலும்,குறிப்பிடப்பட்டுள்ளது.

செயல் அலுவலர் நியமனம் செய்ய அதிகாரமே இல்லாத பிரிவை பயன்படுத்தி, சேலம் சுகவனேஸ்வரர் கோவில், திருத்தணி சுப்ரமணியசுவாமி கோவில், காஞ்சி காமாட்சியம்மன் கோவில், மயிலை கபாலீஸ்வரர் கோயில் போன்ற முக்கிய கோவில்களில், சட்ட விரோதமாக செயல் அலுவலர்களை நியமனம் செய்துள்ளது அறநிலைய துறை. பாக்கி இருப்பது அறநிலைய துறை சட்டம் அத்தியாயம், 6வது பிரிவின் மூலம் செயல் அலுவலர் நியமனம் செய்யும் அதிகாரம் தான். இந்த அத்தியாயத்தில் உள்ள பிரிவுகள், 1954ல், உச்சநீதிமன்றத் தால், தடை செய்யப்பட்ட பிரிவுகள். அவற்றை, 1959ல் புதிய சட்டம் இயற்றும்போது சத்தம் போடாமல், மீண்டும் கொண்டு வந்து விட்டது, அன்றைய தமிழக அரசு. அதனால் தானோ, என்னவோ, அறநிலைய துறை, ஒருமுறை கூட இந்த பிரிவை பயன்படுத்தவில்லை. மேம்பட்ட நிர்வாகம் என்ற காரணம் காட்டி, அறங்காவலர்களை நீக்கி விட்டு, தன் துறையை சேர்ந்த அதிகாரியை, 'தக்காராக' காலவரையின்றி நியமனம் செய்து, கோவில்களைக் கைப்பற்றப் பார்க்கிறது; இது, சட்டவிரோதம். இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன. அறநிலைய துறை சட்டத் தின் மூலம் செயல் அலுவலரை நியமனம் செய்ய வழிவகையே இல்லை. இதுவரை செய்த நியமனங்கள் எவையும் செல்லுபடியாகாத நியமனங்கள்.
இவ்வாறு, அவர் கூறினார்.

http://www.dinamalar.com/district_detail.asp?id=957122

Sunday, April 13, 2014

50 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலங்கள் "சுவாகா!'


கோவில் மற்றும் அறக்கட்டளைகளின் நிலங்களை கையகப்படுத்துவது, கூடிய மட்டும் தவிர்க்கப் பட வேண்டும் என்றும், தகுந்த மாற்று நிலம் கிடைக்காத போது, கடைசி கட்டமாகத் தான் கோவில் நிலங்களை பொது நன்மைக்காக எடுக்க வேண்டும் என்றும், தமிழக அரசின் அரசாணைகளும், சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதல்களும், தெள்ளத்தெளிவாக கூறுகின்றன. "ஆணையரின் அனுமதி இல்லாமல் கோவில் சொத்துக்களை விற்க முடியாது, கோவிலின் நலனுக்கு விரோதமாகவும் விற்க முடியாது' என, அறநிலைய சட்டம் பிரிவு சு 34 கூறுகிறது. பிரிவுகள், 78 மற்றும் 79, கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பதற்கும், வருமான பாக்கிகளை ஜப்தி செய்து எடுக்கவும், இந்த துறை அதிகாரிகளுக்கு மிகச் சிறப்பான அதிகாரங்களை அளிக்கின்றன. சட்டமும், நீதிமன்ற வழிகாட்டுதல்களும் இவ்வாறு இருக்கும் போது, கோவில் சொத்துக்களில் இருந்து, 90 சதவீதம் வருமானம் வராமல் இருப்பதும், மிகப் பெரிய அளவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதும், இந்த துறை தேவை தானா என்ற, கேள்வியை எழுப்புகிறது. வருமானத்தை தான் சரியாக பெறவில்லை. மதிப்பு மிக்க நிலங்களையாவது இந்த துறை காப்பாற்றுகிறதா என்றால், உங்களுக்கு அதிர்ச்சி தான் காத்திருக்கிறது. கடந்த, 1986ல், 5.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் கோவில்களுக்கும், அறக்கட்டளைகளுக்கும் சொந்தமாக இருந்ததாக, அரசு கொள்கை குறிப்பு தெரிவிக்கிறது. இந்து சமய நிறுவனங்களுக்கு இப்போது உள்ள நிலங்களின் பரப்பு, 4.78 லட்சம் ஏக்கர். அதாவது, ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களையும் சேர்த்தால், ஏறத்தாழ, 50 ஆயிரம் ஏக்கர் நிலங்களை இந்த துறை தொலைத்து உள்ளது. இது மிகப்பெரிய அநியாயம்! இப்படியே போனால் கோவில்களுக்கு நிலங்கள் சொந்தம் என்பதை நாம் கல்வெட்டில் தான் பார்க்கலாம். அந்த கல்வெட்டுகளும், புனரமைப்பு என்ற பெயரில், இந்த துறை அதிகாரிகளால், கண்மூடித்தனமாக பெயர்த்து எறியப்பட்டும், உடைக்கப்பட்டும் வருகின்ற நிகழ்ச்சிகளை நாம் பார்த்துக் கொண்டு வருகிறோம். நடப்பது என்ன? நிலம் தேவை என்றால் தமிழக அரசு முதலில் கை வைப்பது கோவில் நிலங்களில் தான். அதிலும், 50, 60 ஏக்கர்கள் மேல் தேவை என்றால் அரசு வேறு எங்கும் தேடுவதில்லை. நேராக கோவில் நிலத்தில் கை வைத்துவிடுகிறது. கோவில் நிலத்தை விற்பதற்குத் தக்காருக்கோ, செயல் அலுவலருக்கோ எந்த உரிமையும் கிடையாது. அரசே முன் மொழிந்து, அரசே பரிந்துரை செய்து, அரசே விற்பனைக்கு ஒப்புதலும் அளிக்கும் அநியாயத்தை தமிழகத்திலும், புதுவையிலும் நாம் திரும்பத் திரும்ப பார்கலாம்.

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தை கட்ட, இப்படி தான் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலின் சொத்துக்கள் அனைத்தையும் அரசு எடுத்துக் கொண்டது. இதில், மேலும் ஓர் அநியாயம், அப்படி கட்டடங்கள் கட்ட எடுத்துக் கொண்ட நிலங்களில், ஓர் ஏரியும் அடங்கும். நீர் நிலைகளில் எப்படி கட்டடங்கள் கட்டலாம்? அப்படி செய்தால், அரசுக்கும், சாதாரண ஏரி ஆக்கிரமிப்பாளருக்கும் என்ன வித்தியாசம்?
கோவில் நிலங்கள் கொள்ளையில் நடக்கும் அநியாயங்கள் கொஞ்சநஞ்சம் அல்ல.
சிக்கல் சிங்காரவேலர் கோவில் நிலங்களுக்கு இழப்பீடு சம்பந்தமான கோப்பு, 10 ஆண்டுகளாக ஆணையர் அலுவலகத்தில் தூங்குகிறது
"மதுரையில், 50 ஏக்கர் நிலங்கள், மீனாட்சி அம்மன் கோவிலுக்குத் தான் சொந்தம்' என்று, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்த பின்பும், தமிழக அரசும் அறநிலைய துறையும் சேர்ந்து, வழக்கில் தோற்றுப் போன ஆக்கிரமிப்பாளனுக்கே விலைமதிப்பற்ற அந்த நிலங்களை பட்டா போட்டுக் கொடுத்தன
அதேபோல், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சாதகமாக வந்த பின்பும், மயிலாடுதுறை சாமவேத பாடசாலையின் நிலங்களை, இந்த துறை மீட்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது
1976ம் ஆண்டு ஆவணங்களின் படி, சென்னை தண்டையார்பேட்டை தனபால் நகரில், 23 மனைகளும், அடையாறில், 500 மனைகளும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரருக்கு சொந்தம் என, தெரிவிக்கின்றன. கோவில் நிர்வாகம் இப்பொழுது அடையாறில், 121 மனைகள் தான் உள்ளன என்று கூறுகிறது. தண்டையார்பேட்டை பற்றி பேச்சே இல்லை. கொள்ளையோ கொள்ளை. 
கடந்த 30 - 40 ஆண்டுகளில், கோவில்களும் அறக்கட்டளைகளும் இழந்த நிலங் களின் மதிப்பு, இன்றைக்கு குறைந்தது, 25 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும்.


http://election.dinamalar.com/detail.php?id=4923

Tuesday, April 1, 2014

கோவில் கணக்கு தணிக்கை அவலட்சணங்கள்

கடந்த 1976ம் ஆண்டு, 'அறநிலைய துறை யால் நிர்வகிக்கப்படும் கோவில்களை, அந்த துறையே தணிக்கை செய்யலாம்' என்ற, அரசாணையை தி.மு.க., அரசு கொண்டு வர ஏற்பாடு செய்தது. இந்த அநியாய அரசாணையை கொண்டு வருவதற்கு முன்னால், தி.மு.க அரசை, மத்திய காங்கிரஸ் அரசு, 1976 ஜனவரி 31ம் தேதி கலைத்துவிட்டது.
அதன் பிறகு நடைபெற்ற கவர்னர் ஆட்சியின் போது, இந்த அரசாணை நிறைவேறும்படி, அறநிலைய துறையே பார்த்து கொண்டது. அன்றில் இருந்து தனது கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் நிர்வாகத்தை, தானே தணிக்கை செய்து வருகிறது அறநிலைய துறை! எவ்வளவு 'வெளிப்படையான' ஏற்பாடு!

தங்களுடைய நிர்வாகத்தை தாங்களே தணிக்கை செய்யும் வசதி அனைத்து துறைகளுக்கும் இருந்தால், '2ஜி' ஊழலோ, நிலக்கரி ஊழலோ வெளியே தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. அது போலத்தான், அறநிலைய துறையின் மாபெரும் ஊழல்களும் வெளியே தெரிவதில்லை. அறநிலைய துறை சட்ட பிரிவு - 87ன் படி, ஐந்து லட்சம் ரூபாய்க்கும் மேல் வருமானம் உள்ள கோவில்களில், ஒருங்கியல் தணிக்கை கட்டாயம் நடைபெற வேண்டும். அதாவது, இத்தகைய கோவில்களில், செலவுகள் நடை பெற்ற உடனேயே, அந்த செலவுகள் தணிக்கைக்கு உட்பட வேண்டும். ஆனால், கோடி ரூபாய் வருமானம் உள்ள கோவில்களில் கூட, சட்டப்படி நடைபெற வேண்டிய உடனுக்குடனான தணிக்கை நடைபெறுவதில்லை. சரி, ஆண்டு முடிந்தவுடன் தணிக்கை நடைபெறுகிறதா என்றால், அதுவும் இல்லை. இரண்டு - மூன்று ஆண்டு களாக தணிக்கை நடைபெறாமல் நூற்றுக் கணக்கான கோவில்களின் கணக்குகள் கிடப்பில் உள்ளன. இது பெரும் குற்றம்.

சமயபுரம் மாரியம்மன் கோவிலின் 2004ம் ஆண்டு கணக்குகள், 2005ல் தணிக்கை செய்யப்பட்டு, 2007 பிப்ரவரி 19ம் தேதி, கோவில் நிர்வாகத்திற்கு அறிக்கையாக கொடுக்கப்பட்டது. அதில் உள்ள தணிக்கை குற்றச்சாட்டுக்களுக்கும், ஆட்சேபனைகளுக்கும் எந்த பதிலும் கொடுக்காத கோவில் நிர்வாகம், அவசர அவசரமாக, தணிக்கை அறிக்கைகளுக்கு 2013 பிப்ரவரி 18ம் தேதி அன்று, தணிக்கை அறிக்கை கொடுக்கப்பட்ட ஆறு ஆண்டுகளுக்கு பின், ஒரு பதில் அறிக்கையை கொடுத்தது. கொடுத்த மறுநிமிடம் மண்டல தணிக்கை யாளர், அதற்கு 'மேல்குறிப்புரை' வழங்கினார். மேலும் சில ஆண்டுகளுக்கான பதில் அறிக்கை களுக்கு, 2013 பிப்ரவரி 20ம் தேதியே 'மேல்குறிப்புரை' வழங்கினார். அடுத்த இரு நாட்களில், ஆணையர் கூட்ட அமர்வில் இவையெல்லாம், அவசரம் அவசரமாக ஏற்றுக் கொள்ளப் படுகின்றன. அறநிலைய துறையின் தணிக்கை லட்சணம் எப்படி உள்ளது என்பதற்கு, இந்த கோவில் ஒரு உதாரணம் தான்.

இந்த துறையில், 2010ம் ஆண்டு வரை, தீர்வை செய்யப்படாமல் இருந்த தணிக்கை தடைகளின் எண்ணிக்கை 7,46,586! அதாவது, ஏறத்தாழ 7.5 லட்சம் முறைகேடு சம்பவங்கள் நடந்திருக்கலாம். இவற்றை எல்லாம், இப்படித்தான் அவசரமாக, கூட்டமர்வில் தீர்வை செய்யப் போகின்றனர் போலிருக்கிறது. 'திருடன் புகுந்த ஆறாம் மாதம் நாய் குரைத்ததாம்' என்ற நிலையை விட இது மோசம். இதில் ஆறுதல் அளிக்கும் ஒரே விஷயம், இன்றளவும் இந்த துறையில் சில நல்ல, நேர்மையான தணிக்கை அலுவலர்கள் உள்ளனர் என்பதுதான். அவர்களால் தான்,

* திருச்செந்தூரில் 5,389 கோவில் மாடுகள் காணாமல் போனது

* கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 3 லட்சம் கனஅடி கிரானைட் கொள்ளை அடிக்கப்பட்டது

* கோவில் கட்டண சீட்டுகளில் நடந்த ஊழலில் ஒரே ஆண்டில் 1.5 கோடி ரூபாய் ஊழல்

* அறநிலைய துறையின் கோவை இணை ஆணையர், அமைச்சர் உறவினருக்கு, கோவில் பணத்தில் விமான பயணச்சீட்டு வாங்கியது

* செம்மொழி மாநாட்டிற்கு, மருதமலை கோவிலில் இருந்து பெரும் தொகை கொடுத்தது

* கோவில் யானையை படப்பிடிப்புக்கு கொடுத்து, சினிமா கம்பெனியினர் அந்த யானையையும், பாகனையும் அம்போ என்று, நடுக்காட்டில் விட்டுச் சென்ற பிறகு, கோவில் பணத்தில் இருந்து, பெரும் செலவு செய்து அவர்களை மீட்டு வந்தது

* ஸ்ரீரங்கம் கோவிலில், ஒரே ஆண்டில் 105 மாடுகள் இறந்து போனது உள்ளிட்ட பகீர் சம்பவங்களை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால், தணிக்கையாளர்கள் கடமை தவறாமல் பதிவு செய்துள்ள இத்தகைய கடுமை ஆன தவறுதல்கள் மீது, ஆணையரோ, அரசோ எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்; எடுக்கவில்லை. இப்படி எந்த பிரயோஜனமும் இல்லாத தணிக்கைக்கு, இவர்கள் வசூலிக்கும் தொகை, மொத்த வருமானத்தில் 4 சதவீதம். இது மிகமிக அநியாயமான ஒரு கட்டணம். 1,23,000 கோடி ரூபாய் வைப்பு நிதி, 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள், இந்தியா முழுவதும் பரவியுள்ள 1,882 கிளைகள், 12,000 கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் உள்ள ஆந்திரா வங்கியை ஆண்டுத் தணிக்கை செய்ய, ஆறு பட்டய கணக்கர் நிறுவனங்களுக்கு, அந்த வங்கி வழங்கும் தொகை 15 கோடி ரூபாய். அதாவது, மொத்த வருமானத்தில் 0.125 சதவீதம் மட்டுமே. ஆனால், 660 கோவில்களுக்கு ஒரு தணிக்கை கையேடு கூட இல்லாமல், மோசமாகவும், தாமதமாகவும், எந்த பலனும் அளிக்காத வகையில் செய்யப்படும் தணிக்கைக்கு, தணிக்கை கட்டணம் என்ற பெயரில் இந்த துறை அடிக்கும் கொள்ளையோ 25 கோடி ரூபாய். இந்த அநியாய தொகையையும், இவர்கள் தணிக்கையை துவக்கும் முன்பே எடுத்துக்கொண்டு விடுவர். இந்த துறையின் கட்டுப்பாட்டில் கோவில்கள் உள்ளவரை, தமிழக கோவில்களில் நல்ல நிர்வாகத்தை நாம் பார்க்கவே முடியாது!

செய்தி : http://election.dinamalar.com/m/detail.php?id=2505